
காசா முனை,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 50 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதேவேளை , இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துளனர். இந்த போர் ஓராண்டுக்குமேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவால் காசாவுக்குள் கடத்தி செல்லப்பட்ட பணய கைதிகளில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் இன்று அறிவித்துள்ளது. பணய கைதிகளாக கடத்தி செல்லப்பட்டு ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட அப்ரா கிதர், ஜனாதன் சமிரனோ, ஷாய் லிவின்சன் ஆகிய 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 3 பேரின் சடலங்களும் இறுதிச்சடங்கிற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டு இன்னும் 50 பேர் காசா முனையில் பணய கைதிகளாக உள்ளனர்.