
நெல்லை,
டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்று வரும் 2-வது லீக் ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மதுரை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ராம் அரவிந்த் ஒரு ரன்னிலும், பாலசந்தர் அனிருத் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்து மதுரை அணியால் கடைசி வரை மீளமுடியவில்லை.
மதுரை அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மிடில் வரிசையில் களமிறங்கிய சரத்குமார் (31 ரன்கள்) மட்டுமே பொறுப்புடன் ஆடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார்.
இறுதி கட்டத்தில் ராஜலிங்கம் அதிரடியாக விளையாடி மதுரை அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மதுரை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் அடித்துள்ளது. கடைசி பந்தில் ராஜலிங்கம் (22 ரன்கள்) ரன் அவுட் ஆனார். திருப்பூர் தரப்பில் சாய் கிஷோர் மற்றும் சிலம்பரசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திருப்பூர் களமிறங்க உள்ளது.