
ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாலை தொடங்கியது.
இதையொட்டி மாலை 6 மணி அளவில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நம்பெருமாள் உள்கோடை திருநாள் வருகிற 7 -ந்தேதி தொடங்கி 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவையும் நடைபெறுகிறது. 6-ந்தேதி ஸ்ரீராமநவமியையொட்டி மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நம்பெருமாள் சேரகுலவள்ளி தாயார் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது. 12-ந்தேதி சித்ரா பவுணர்மி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.