
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
2-வது நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
9-ந்தேதி வரை திருவிழா தொடர்ந்து நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, பரதநாட்டியம், இன்னிசைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.