
கொல்கத்தா,
அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவர் ஷர்மிஷ்டா பனோலி. புனே சட்ட பல்கலைக்கழக 4-ம் ஆண்டு மாணவியான இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட்டை சேர்ந்த முஸ்லிம் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று பகிர்ந்தது சர்ச்சையானது. இது வகுப்புவாத மோதலை தூண்டி விடுகிறது என எதிர்ப்பு வலுத்தது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் குவிந்தது. அவரை விமர்சித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டனர். சிலர் அவரை அச்சுறுத்தும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டனர். இதனால், அவர் அந்த வீடியோவை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். மன்னிப்பும் கோரினார்.
எனினும், கொல்கத்தாவில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பனோலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் பயந்து போன அவர், குடும்பத்துடன் தலைமறைவானார். அவருக்கு எதிராக, கைது வாரண்ட் ஒன்றை கோர்ட்டு பிறப்பித்தது. இந்த சூழலில் அவரை குருகிராமில் வைத்து, கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். பா.ஜ.க. தலைவர்கள் பலரும் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
எனினும், அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ, மத உணர்வுகளை புண்படுத்தி விட்டது என்ற வகையிலும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில், அவருடைய இடைக்கால ஜாமீன் பற்றி கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதி பார்த்தசாரதி சாட்டர்ஜி கூறும்போது, நம்முடைய நாட்டில் பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆனால், அதனை பயன்படுத்தி நீங்கள் மற்றவரை புண்படுத்தி விடலாம் என்று அர்த்தம் இல்லை. நம்முடைய நாடு பன்முக தன்மை கொண்டது. வெவ்வேறு சாதி, இனம் மற்றும் மதம் சார்ந்த மக்கள் நிறைந்துள்ளனர். அதனால் நாம் இதனை பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
பனோலியை கைது செய்ய வலியுறுத்தி #ArrestSharmishta என்ற ஹேஷ் டேக்கும் வைரலானது. பனோலிக்கு மருத்துவ கவனிப்பு சரிவர கிடைக்காமல் உடல்நலம் மோசமடைந்து உள்ளது என்று அவருடைய வழக்கறிஞர் முகமது சமிமுதீன் கூறினார். எனினும், பனோலிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கொல்கத்தா ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது. இந்நிலையில், பனோலிக்கு எதிராக புகார் அளித்த வஜாகத் கான் காணாமல் போயுள்ளார் என அவருடைய தந்தை சாதத் கான் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.