சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை ஒப்படைக்க வலியுறுத்தி மீனவ பயனாளிகள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். குடியிருப்புகள் தயார் நிலையில் உள்ள நிலையில், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய வாரியம் சார்பில் அழைத்து, பயனாளி பங்கீட்டு தொகையாக ரூ.2 லட்சத்துக்கு மேல் செலுத்துமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே முன்பணமாக ரூ.50 ஆயிரம் கட்டியிருப்பதால், மேற்கொண்டு செலுத்த தங்களிடம் பணம் இல்லை என பயனாளிகள் கூறி வந்தனர். இந்த பயனாளிகளில் பெரும்பாலானோர் மீனவர்கள்.