
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் சந்தர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிராம் பால். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஹரிராம் இன்று காலை கிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் இருந்தார். அப்போது, ஹரிராமின் வீட்டிற்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கும்பல் நுழைந்தது. அந்த கும்பல் ஹரிராமை சரமாரியாக தாக்கியது. மேலும், அவரது மனைவி குழந்தைகளை கடத்தி செல்ல முற்பட்டது. அதற்கு ஹரிராம் எதிர்ப்பு தெரிவிக்கவே ஹரிராமை அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதில் ஹரிராம் படுகாயமடைந்தார். பின்னர் அந்த கும்பல் ஹரிராமின் மனைவி மற்றும் 2 பெண்குழந்தைகளையும் காரில் கடத்திச்சென்றது.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த ஹரிராம் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தி செல்லப்பட்ட ஹரிராமின் மனைவி மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்டது அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் சிங் என்பது தெரியவந்துள்ளது. தற்போதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கடத்தி செல்லப்பட்ட ஹரிராமின் மனைவி, குழந்தைகளை போலீசார் தேடி வருகின்றனர்.