
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2025-2026-ம் ஆண்டுக்கான கூட்டுறவு துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, கூட்டுறவு துறை அமைச்சர் நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேற்சொன்ன அறிவிப்பின்படி, விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாய தொழிலாளர்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த ஏதுவாக தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் "நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு கடன்" ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
வங்கியின் செயல் எல்லைக்குள் வசிக்கின்ற மற்றும் இணை உறுப்பினராக பதிவு செய்து கொண்ட 21 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 55 வயதுக்குட்பட்ட ஏழை பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு கடன்கள் அனுமதிக்கப்படும். CIBIL மதிப்பெண் 675க்கு மேல் இருக்க வேண்டும். சொத்தின் மதிப்பில் 65 சதவீதம் வரை, அதிகபட்ச கடன் தொகையாக ரூ.5 லட்சம் (2 ஏக்கர் வரை மட்டுமே) வழங்கப்படும்.
கடன் தொகைக்கான கடன் உறுதி ஆவணம் கடன் வாங்குபவரால் செயல்படுத்தப்பட வேண்டும். கடன் ஐந்தாண்டுகளுக்குள் திருப்பி செலுத்தப்பட வேண்டும். கடனுக்கான வட்டி விகிதம் 10 சதவீதம். வங்கிக் கடனில் வாங்கிய விவசாய நிலம் வங்கியின் பெயரில் அடமானம் வைக்கப்படும். கடன் வாங்கியவர் அசல் உரிமைப் பத்திரத்தை வங்கியில் ஒப்படைக்கவும், அடமான ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு புதிய வில்லங்க சான்றிதழை ஒப்படைக்கவும் வேண்டும். கடன் விண்ணப்பதாரர் வங்கியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உத்திரவாதம் அளிப்பவர்/ பிணையதாரரை அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் மனுதாரர் மற்றும் பிணையதாரரின் ஆதார், ஸ்மார்ட் மற்றும் பான் கார்டு நகல், மூல ஆவணங்களுடனான நில உடைமை ஆவணங்கள், கடந்த 13 வருடங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ், பட்டா/சிட்டா/அடங்கல், சொத்து வரி ரசீது, நிலத்தை வாங்குவதற்கான விற்பனை ஒப்பந்தம் பத்திரம், சொத்து உரிமையை நிரூபிப்பதற்கான வங்கியின் சட்ட ஆலோசகர் கருத்து, வங்கியின் மதிப்பீட்டாளரால் அளிக்கப்பட்ட சொத்தின் மதிப்பீடு, சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ், அவ்வப்பொழுது வங்கியால் தேவையானதாக வரையறுக்கப்படும்/ விதிக்கப்படும் மற்ற ஆவணங்கள்/ சான்றிதழ் இனங்கள் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
முன்மொழியப்பட்ட நிலம் பாசன வசதி கொண்ட நிலமாக இருக்க வேண்டும். வாங்கப்படும் நிலம் பயிர் சாகுபடி செய்ய தகுதியுடைய நிலமாக இருக்க வேண்டும். கடனை அடைக்கும் வரை விளைவிக்கப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வது கட்டாயம். இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பெண் விவசாயத் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி கிளையினை அணுகி பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.