
சென்னை,
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே துவங்கி நடைபெற்று வந்தது. இதில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே 19 (1) (ஏ) என்ற மலையாள படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது . குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்தே படம் உருவாகியுள்ளதாம். விஜய் சேதுபதி - இயக்குநர் பாண்டிராஜ் இணையும் முதல் படமென்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு "ஆகாச வீரன்" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.