
புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
மேலும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே மணிப்பூர் முதல்-மந்திரியாக இருந்து வந்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பி.ஆர்.கவாய் உள்பட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் வருகிற 22-ந்தேதி மணிப்பூர் செல்ல இருப்பதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள். நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்ககளுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.