
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் முத்தையாபுரம் அருகே உள்ள சுந்தர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் நிஷாந்த். இவருடைய மனைவி சிந்துஜா (வயது 30). இந்த தம்பதியின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கந்தசாமி (வயது 91). இந்நிலையில், நிஷாந்தின் வீட்டு வளாக சுவரை ஒட்டி வாழை மரம் ஒன்றை கந்தசாமி வளர்த்து வந்துள்ளார்.
அதன் காய்ந்த இலைகள் நிஷாந்தின் வீட்டிற்குள் விழுந்துள்ளன என கூறப்படுகிறது. இதனால், வாழை மரத்தின் காய்ந்த கிளைகளை அகற்றும்படி நிஷாந்த் கூறியுள்ளார். இதனால் நிஷாந்த் குடும்பத்தினருக்கும், கந்தசாமி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிஷாந்தின் மனைவி சிந்துஜா வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தபோது, அரிவாளுடன் வந்த கந்தசாமி வாழை மரத்தின் இலைகளை ஏன் வெட்டினாய்? என்று கேட்டபடியே சிந்துஜாவை வெட்டினார். இதில் காயமடைந்த அவர் அலறியவாறு தெருவில் ஓடினார்.
ஆனாலும், ஆத்திரம் தீராத முதியவர் அரிவாளுடன் அவரை துரத்தி சென்று வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிந்துஜாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த முதியவர் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிந்துஜா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.