டெஸ்ட் கிரிக்கெட்: 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90/2

6 hours ago 3

லீட்ஸ்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (101 ரன்கள்), கில் (147 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ரன்கள்) சதம் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 2-வது நாள் முடிவில் 209 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் 100 ரன்களுடனும் , ஹாரி புரூக் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா மட்டுமே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

இந்த சூழலில் 3-வது நாள் இன்று தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆலி போப்பின் விக்கெட்டை பறிகொடுத்தது. பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் போப் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் புரூக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

52 பந்துகளை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் 20 ரன்களில் சிராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேமி சுமித்தும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து அணி கம்பீரமாக முன்னிலையை நோக்கி பயணித்தது. இதனிடையே ஹாரி புரூக் அரைசதத்தை கடந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேமி சுமித் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சதத்தை நோக்கி வெகுவாக முன்னேறிய ஹாரி புரூக் ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் 99 ரன்களில் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் ஷர்துல் தாகூரிடம் கேட்ச் கொடுத்து சோகமாக வெளியேறினார். அடித்து ஜோடி சேர்ந்த கிறிஸ் வோக்ஸ் - பிரைடன் கார்ஸ் கூட்டணியும் இந்திய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தது.

இதனால் இங்கிலாந்து அணி முன்னிலை பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதி கட்டத்தில் பும்ரா மற்றும் சிராஜ் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து முன்னிலை பெறுவதை தடுத்தனர். பிரைடன் கார்ஸ் 22 ரன்களில் சிராஜின் பந்துவீச்சில் போல்டானார். சிறிது நேரத்திலேயே வோக்ஸ் (38 ரன்கள்) மற்றும் ஜோஷ் டங்கை (11 ரன்கள்) பும்ரா காலி செய்தார்.

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 100.4 ஓவர்களில் 465 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி ஓரளவு ரன்கள் சேர்த்த சாய் சுதர்ஷன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து கே.எல். ராகுலுடன் கேப்டன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இந்த சூழலில் 3-ஆம் நாள் முடிவுக்கு வந்தது. 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் 47 ரன்களும், சுப்மன் கில் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் சார்பில் பிரைடன் கார்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 96 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நாளை 4-ஆம் நாள் நடைபெறுகிறது.

Read Entire Article