திருவாரூர்: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை வருமான வரித் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சிப்பதாகவும், தமிழக அரசு இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருமான வரித் துறை சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி, கூட்டுறவு சங்கங்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அனைத்து சங்கங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.