திருமலை: திருப்பதி வேத பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் இன்று சிறுத்தை புகுந்தது. இதனால் மாணவர்கள், பேராசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி சிறுத்தை வெளியேறி அங்குள்ள பல்கலைக்கழகம், குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடுவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாக வேத பல்கலைக்கழக வளாகத்தில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் புகுந்து விடுகிறது. இதனால் மாணவர்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். இதையறிந்த வனத்துறையினர் மாணவர்கள் யாரும் இரவு நேரத்தில் வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை வேத பல்கலைக்கழக வளாகம் அருகே வனத்துறையினர் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வளாகத்தில் புதர் மறைவில் சிறுத்தை அமர்ந்திருப்பதை கண்ட அவர்கள், சைரன் ஒலி எழுப்பி காட்டுக்குள் விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் சைரன் ஒலிக்கும் அசையாமல் அங்கேயே இருந்தது. இதனால் வனத்துறையினர் வாகனத்தில் காத்திருந்தனர். இதையடுத்து சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சிறுத்தை சென்றுவிட்டது. கடந்த 2 நாட்கள் முன்பு இதே பல்கலைக்கழக வளாகத்தில் தெரு நாயை கவ்வி சென்ற சிறுத்தை, மீண்டும் இன்று அதிகாலை வளாகத்தில் வந்ததால் மாணவர்கள், பேராசிரியர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
The post திருப்பதி பல்கலைக்கழகத்தில் சிறுத்தை மீண்டும் நடமாட்டம்: மாணவர்கள் பீதி appeared first on Dinakaran.