
வனத்தீ பருவகாலத்திற்கு பின்னர் தமிழ்நாட்டில் இன்று முதல் மீண்டும் மலையேற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு வனத்துறை மூலம் இயற்கையைப் போற்றுவதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு மலையேற்ற திட்டம் (Trek Tamil Nadu) துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 24.10.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. இத்துடன் இணையவழி முன்பதிவிற்கான வலைதளமும் www.trektamilnadu.com-ம் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர்/வனப் பகுதிகளை ஒட்டியுள்ள மக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் அவர்கள் நிலையான வருமானம் ஈட்டவும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இம்முன்னெடுப்பின் மூலமாக மலையேற்ற வழிகாட்டி பயிற்சிகள் வழங்கப்பட்டு வழிகாட்டிகளாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த பயிற்சி பெற்ற 200 நபர்கள் மலையேற்ற வழிகாட்டிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மலையேற்றம் மேற்கொள்பவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அனைத்து பாதைகளும் சூழல் நிலைக்கேற்ப கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக (நவம்பர் 1, 2024 முதல் பிப்ரவரி 14, 2025 வரை), இத்திட்டத்தின் மூலம் ரூ.63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டு, அதில் ரூ.56.71 லட்சம் உள்ளூர் சமூக மலையேற்ற வழிகாட்டிகளுக்கான ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 4,792 பங்கேற்பாளர்கள் வெற்றிகரமாக மலையேற்றத்தினை முடித்துள்ளனர். இது இந்தியாவில் பொறுப்பான இயற்கை சார்ந்த சுற்றுலாவிற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினப்பகுதிகள் (மலையேற்றத்தை ஒழுங்குபடுத்துதல்) விதிகள், 2018-ன் படி, வனப்பகுதிகளில் ஏற்படும் தீ மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் மலையேற்ற நடவடிக்கைகள் ஆண்டுதோறும் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன.
வனத்தீ பருவகாலம் முடிவுறும் நிலையில், இன்று (ஏப்ரல் 16) முதல் மலையேற்றத்திற்காக 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இத்தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகள், எளிதானது முதல் மிதமான சிரமம் கொண்டவைகளாக முதன்மைபடுத்தப்பட்டு, அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு பாதுகாப்பான, இனிமையான மற்றும் கல்வி சார்ந்த அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட 23 மலையேற்றப்பாதைகள்:
1. நீலகிரி லாங்வுட் ஷோலா - எளிது
2. கரிக்கையூர் முதல் போரிவரை பாறை ஓவியம் - மிதமானது
3. கரிக்கையூர் முதல் ரங்கசாமி சிகரம் - மிதமானது
4. பார்சன்ஸ் பள்ளத்தாக்கு முதல் முக்குர்த்திகுடில் - கடினம்
5. அவலாஞ்சி (காலிபிளவர் ஷோலா) முதல் கோலாரிபெட்டா - மிதமானது
6. அவலாஞ்சி (காலிபிளவர் ஷோலா) முதல் தேவார்பெட்டா - கடினம்
7. ஜீன்பூல் - எளிது
8. ராக்வுட் பாதை - மிதமானது
9. கோயம்புத்தூர் மாணம் போலி - மிதமானது
10. திருப்பூர் சின்னார் சோதனைச்சாவடி முதல் கோட்டாறு - எளிது
11. கன்னியாகுமரி காளிகேசம் முதல் பாலமோர் - மிதமானது
12. காளிகேசம் முதல் மராமலை - மிதமானது
13. இஞ்ஜிக்கடவு - மிதமானது
14. திருநெல்வேலி காரையார் முதல் மூலக்கசம் - எளிது
15. தென்காசி தீர்த்தப்பாறை - எளிது
16. தேனி குரங்கனி முதல் சாம்பலாறு - எளிது
17. திண்டுக்கல் கொடைக்கானல் முதல் வெள்ளகவி - மிதமானது
18. கிருஷ்ணகிரி குத்திராயன் சிகரம் - கடினம்
19. பிலிகுண்டுலு முதல் ராசிமணல் - மிதமானது
20. சேலம் நகலூர் முதல் சன்னியாசிமலை சிகரம் - எளிது
21. திருப்பத்தூர் ஏலகிரி சுவாமி மலை - எளிது
22. ஜலகம்பாறை - மிதமானது
23. திருவள்ளூர் குடியம் குகைகள் பாரம்பரிய பாதை - எளிது
தற்போது திறக்கப்பட்டுள்ள 23 மலையேற்ற வழித்தடங்கள் மட்டுமன்றி மீதமுள்ள வழித்தடங்ளிலும் வனத்தீ தொடர்பான கள நிலவரங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னர் அந்த வழித்தடமும் விரைவில் திறக்கப்படும். தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தின் (TREK TAMIL NADU) மறுதுவக்கம், மலையேற்ற அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் குறைந்த நுழைவுக்கட்டணம், பிரத்யேக உள்ளூர் உணவு, முகவர்கள் முன்பதிவு, மின்னணு - சான்றிதழ்கள் (e-certificates) போன்ற புதிய முன்னெடுப்புகளுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளில் தொடங்கப்படுகிறது. மேலும், நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், கார்பன் தடத்தை குறைப்பதன் மூலமும் நிலையான மலையேற்றத்தை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த மறுதுவக்கம், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான மலையேற்றத்திற்கு வழிவகுக்கும் சிறந்த முயற்சியாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.