வங்காளம் பற்றி எரியும்போது டீ குடிக்கும் புகைப்படம் வெளியிட்ட எம்.பி.: பா.ஜ.க. கண்டனம்

1 month ago 8

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று முன்தினம் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அதில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது.

வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், வன்முறை பாதித்த சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில் தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்டனர். வன்முறைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த விவகாரத்தில், 150 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் எம்.பி.யாக உள்ளார். பஹராம்பூர் தொகுதியின் எம்.பி.யான பதான், தேநீர் (டீ) குடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, அமைதியான பின்னணியில், தேநீரை மகிழ்ச்சியாக பருகுவது போன்று, அவர் வெளியிட்ட இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அக்கட்சியை சேர்ந்த தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா வெளியிட்ட செய்தியில், வங்காளம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துக்களாக பார்த்து கொல்லப்பட்டு வருகிறார்கள். யூசுப் பதான் மகிழ்ச்சியாக டீ பருகி கொண்டிருக்கிறார்.

இதுவே திரிணாமுல் காங்கிரஸ் கொடுக்கும் முன்னுரிமை. வங்காளம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, தாஸ் குடும்பத்தினர் படுகொலை செய்யப்படும்போது, பதான் டீ குடித்து மகிழ்ச்சியாக இருப்பார் என தெரிவித்து இருக்கிறார்.

யூசுப் பதான், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று 3 புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தில், மதிய நேரத்தில் நல்லதொரு டீ. அமைதியான சூழல். இந்த தருணத்தில் மூழ்கி போயிருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

அவருடைய இந்த பதிவுக்கு மத்திய மந்திரி சுகந்த மஜும்தார், தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர். கேசவன் உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Read Entire Article