
சிங்கப்பூர்,
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
இதில் பயணம் செய்த 20 வயது இந்திய வாலிபரான ரஜத் என்பவர் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பின்பக்கம் இருந்தபடி, பணிப்பெண்ணை பிடித்த அவர், அப்படியே கழிவறையை நோக்கி அவரை தள்ளி சென்றுள்ளார்.
இதனால், அந்த பணிப்பெண் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் பயந்தும் போயுள்ளார். அந்த வாலிபரின் செயலால், மனவருத்தம் மற்றும் கலக்கம் அடைந்திருக்கிறார். விமானம் சாங்கி விமான நிலையம் சென்றடைந்ததும் போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுபற்றிய வழக்கு விசாரணையின்போது, துணை அரசு வழக்கறிஞரான லாவ் கூறும்போது, வர்த்தக விமான பயணம் என்பது அதிக நெருக்கடியான சூழலை கொண்டது. நெருங்கிய அளவில் தொடர்பு இருக்கும்போது, விருப்பமில்லாத உடல் தொடர்பை கண்டறிவது என்பது கடினம் என கூறியுள்ளார்.
இந்த வழக்கில் நடந்த விசயங்களை ரஜத் ஒத்துக்கொண்டார். அவருக்கு விசாரணை முடிவில், கோர்ட்டில் நேற்று 3 வாரம் சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.