
ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ராம் பொத்தினேனி, வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களை தொடர்ந்து, 'டபுள் இஸ்மார்ட்' எனும் படத்தில் நடித்திருந்தார். கடந்த 2019ல் வெளியான 'இஸ்மார்ட் சங்கர்' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்படத்தைத்தொடர்ந்து, ராம் பொத்தினேனி தனது 22-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.ஏ.பி.ஓ 22 என பெயரிடப்பட்டுள்ளது. மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி பட இயக்குனர் மகேஷ் பாபு இயக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.
கடந்த மாதம் ராஜமுந்திரியில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. சுமார் 34 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு தற்போது அந்த படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. வருகிற 28-ம் தேதி ஐதராபாத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.