டாக்கா: அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு இல்லாதது, ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்தாண்டு ஆகஸ்டில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தால், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அவரது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார். தொடக்கத்தில் இடைக்கால அரசுக்கு அந்நாட்டின் ராணுவ தளபதி வேக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளித்து வந்தார். பின்னர், ராணுவ தளபதியை ஆலோசிக்காமல் இடைக்கால அரசின் தலைவர் சில முடிவுகள் எடுத்ததை தொடர்ந்து, இருதரப்பினருக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, கடந்த இரண்டு நாள்களாக உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று ராணுவ தளபதி அழுத்தம் கொடுத்து வருகிறார். மேலும், தேர்தலை நடத்த பல்வேறு அதிகாரிகளும் ஆதரவளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், யூனுஸுக்கு எதிராக வங்கதேச தலைநகர் டாக்காவில் தேசியவாத கட்சியும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் இடைக்கால அரசின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முகமது யூனுஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் பரவின. இதுகுறித்து ஒருங்கிணைந்த மாணவர் அமைப்பான தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் நித் இஸ்லாம் கூறுகையில், ‘முகமது யூனுஸ் பதவி விலகுவதாக செய்திகள் பரவிய நிலையில் அவரை நேரில் சந்தித்து ஆலோசித்தேன். பணி செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடி நிலவுவதாகவும், அதனால் ராஜினாமா குறித்து யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளுக்குள் பொதுவான முடிவு எட்டப்படவில்லை என்றால், முகமது யூனுஸ் ராஜினாமா செய்துவிடுவார். அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார். இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், ‘வங்கதேசத்தில் தொடர்ந்து நிலவும் அரசியல் குழப்பங்கள், அவாமி லீக் கட்சி மீதான தடைகள், தேர்தல் சீர்திருத்தங்களில் முன்னேற்றமின்மை, இந்தியாவுடனான உறவில் சிக்கல் ஆகியவை இடைக்கால தலைவரை பதவி விலகல் முடிவுக்கு தள்ளியுள்ளது. அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால், அவரால் நிர்வாகப் பணிகளைத் தொடர முடியவில்லை. இருப்பினும், முகமது யூனுஸின் ராஜினாமா குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அவரது இடைக்கால அரசு, 2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சித்து வருகிறது.
ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு பிறகு, வங்கதேசத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான மோதல்கள் மற்றும் மத அடிப்படையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன. மேலும், ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், ஷேக் ஹசீனாவின் ராஜினாமா கடிதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தது, இடைக்கால அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளார். இதனால், முகமது யூனுஸ் மீது உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரம், வங்கதேசத்தின் எதிர்கால அரசியல் திசையைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் உலக நாடுகள் வங்கதேச அரசியல் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
The post ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜினாமா?.. அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பில்லாததால் நெருக்கடி appeared first on Dinakaran.