ராணிப்பேட்டையில் பயங்கரம்: காதலை ஏற்க மறுத்ததால் மாணவி குத்திக்கொலை

1 day ago 3

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகத்குமார், தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜனனி (15 வயது). 10-ம் வகுப்பு முடித்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால், ஜெகத்குமாரின் அக்கா மகள்களான லக்ஷயா (16 வயது), சரண்யா ஆகியோருடன் ஜனனி பாட்டில் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார். பின்னர் மாணவி ஜனனியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனை தடுத்த லக்ஷயாவுக்கு கையில் கத்திக்குத்து விழுந்தது. அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு மாடியில் இருந்த பாட்டி கீழே இறங்கி வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

உடனடியாக அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜனனி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். லக்ஷயாவிற்கு கையில் பலத்த வெட்டு காயம் இருந்தது. கத்தியுடன் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அங்கிருந்து தப்பிக்க முயன்ற அவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்தனர். பின்னர் இதுகுறித்து கொண்டபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசாரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (21 வயது) என்பது தெரிய வந்தது. அவர் ஏற்கனவே பலமுறை ஜனனியிடம் அவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அதனை ஜனனி ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மாணவிகளை சரமாரியாக குத்தியது தெரியவந்தது. இதுகுறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article