
சென்னை,
சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
நமது சந்திப்பின் நோக்கம் 3 வாரங்களில் உங்களது பணிகளை செய்து முடிக்க வேண்டும். இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது; உறுப்பினர் புதுப்பிப்பை 3 வாரங்களில் முடிக்க வேண்டும். அடுத்த கட்டத்திற்கு கட்சி செல்ல நாமெல்லாம் ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டும். உங்களால் தான் மாநாடு வெற்றி பெற்றது; என்னால் அல்ல.
பாமகவில் குழப்பங்கள் நிறைய நடக்கின்றன; அவை அனைத்தும் தற்காலிகமானவை. தற்போதைய குழப்பங்கள் சரி செய்யப்படும்; அதை சரிசெய்து விடுவேன். முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். இதுவரை எனக்கான சூழல் வரவில்லை; புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன். திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; வேற யாருக்கும் அதிகாரமில்லை.
உலகத்திலேயே ரொம்ப பிடித்தது எங்கள் அம்மா தான், அவர்களுக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும். என் அம்மா மீது சிறு துரும்பு கூட பட விட மாட்டேன். என் வாழ்க்கையில் எண்ணற்ற பழிகளை சுமந்தவன் நான். எவ்வளவோ அவமானங்களை சந்தித்துவிட்டேன். அபாண்ட பழிகள் என்னை மேலும் மேலும் வலுப்படுத்தின. இனி நாம் வேகமாக செல்வோம். யார் நீக்கப்பட்டாலும் கவலை வேண்டாம்; நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே நியமன கடிதம் அனுப்புவேன். என்னுடைய கடிதமே செல்லும்.
இனி நாம் வேகமாக முன்னேறுவோம்; ராமதாஸ் கொள்கைகளை கடைபிடிப்போம். நீங்கள் நினைத்தால்தான் எங்களை நியமனம் செய்ய முடியும்; அதுதான் நமது கட்சியின் விதி. "நிறைய மன உளைச்சலில் இருந்தேன். நேற்றுதான் விடுதலை கிடைத்தது. இனி எந்த தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து, நாம் வேகமாக பயணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.