
மாலி,
இந்தியாவை சேர்ந்த நபர் மாலத்தீவின் கன்கொடொ தீவு பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை வகுப்பறையில் 11 வயதான மாணவனை தாக்கியுள்ளார். இதில் மாணவனின் விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவனுக்கு காயமும் ஏற்பட்டது. மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதையடுத்து, மாணவனை தாக்கிய இந்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அவர் 24 மணி நேரம் போலீஸ் காவலில் இருந்த நிலையில் தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டதாக மாலத்தீவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின்போது போலீசாருக்கு ஆசிரியர் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படாமல் பிற நடைமுறைகள் முடிவடைந்ததும் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆசிரியரின் பெயர் உள்ளிட்ட விவரம் எதுவும் வெளியாகவில்லை.