மேட்டூர் உள்ளிட்ட 4 அணைகளை மேம்படுத்த அறிக்கை தயாரித்து பணிகளை விரைவில் தொடர திட்டம்: நீர்வளத்துறை தகவல்

6 months ago 21

சென்னை: மேட்டூர் உள்ளிட்ட நான்கு அணைகளை மேம்படுத்துவதற்காக அறிக்கை தயாரித்து விரைவில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2020-21ம் ஆண்டில் நீர்வளத்துறையின் மானிய கோரிக்கையின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேட்டூர், வைகை, அமராவதி மற்றும் பேச்சிப்பாறை ஆகிய நான்கு அணைகளின் கொள்ளளவை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்தவகையில் இதற்கான அரசாணை கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் நான்கு அணைகளின் தூர்வாரும் பணிகளுக்கான சட்டரீதியான அனுமதி மற்றும் ஆலோசனைக் கட்டணம் ₹3.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, தகுந்த ஆலோசனை முகமைகளை தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, வைகை மற்றும் அமராவதி அணைகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் முறையே வரும் 13ம் தேதி மற்றும் 20ம் தேதியன்று திறக்கப்படவுள்ளது. மேட்டூர் மற்றும் பேச்சிப்பாறை அணைக்கான ஒப்புந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நீர்வளத்துறையின் பரிசீலனையில் உள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டவுடன் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு நான்கு அணைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மேட்டூர் உள்ளிட்ட 4 அணைகளை மேம்படுத்த அறிக்கை தயாரித்து பணிகளை விரைவில் தொடர திட்டம்: நீர்வளத்துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article