மூணாறு,
மூணாறில் கோடைக்காலம் தொடங்கி விட்டால், வனப்பகுதியில் சிலர் தீ வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இதனால் வனப்பகுதியில் மரங்கள், செடிகள் அழிந்து விடுகிறது. அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலைப்பகுதியில் உள்ள புல்மேடுகளில் காட்டுத்தீ பிடிக்காமல் இருப்பதற்காக வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதில் முதல் கட்டமாக இரவிக்குளம் தேசிய வனச்சரணாலயம் பகுதியில் ஆனைமுடி என்னுமிடத்தில் காய்ந்த புற்களை வனத்துறையினர் நேரடி கண்காணிப்பில் தீ வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து இரவிக்குளம் தேசிய வனச்சரணாலய இணை வார்டன் நிதின்லால் கூறுகையில், வனப்பகுதியில் காய்ந்த புற்களில் தீ வைப்பதால் அவை எரிந்து விடும். பின்னர் அந்த பகுதியில் புதிய புற்கள் முளைக்கும். அந்த புற்கள் வரையாடுகளுக்கு உணவாக பயன்படும். மேலும் காட்டுத்தீ பரவாமல் தடுக்க முடியும், என்றார்.