அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு

3 hours ago 1

சென்னை,

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது.

இதனிடையே முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி. யுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய தலைமை தேர்வு செய்தது உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. உரிமையியல் கோர்ட்டுக்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன. தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்துள்ள யாரும் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். அ.தி.மு.க.வில் எந்த பிளவும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த ஆதரவு அப்படியே தொடர்கிறது.

பொதுக்குழு உறுப்பினர்களும், 65 சட்டமன்ற உறுப்பினர்களில் 61 உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதால், சட்டசபை தேர்தல் நெருங்கிய உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு சின்னத்தை முடக்கினால் அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். கட்சி தனக்கு சொந்தமானது என யாரும் உரிமை கூறாத நிலையில் உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் தரப்பில், ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என்றும், தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா, இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி பயன்படுத்த தடை விதித்திருந்தாலும், தற்போது கட்சி உறுப்பினர்கள் மன நிலைமை மாறி பெரும்பாலானோர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் வாதத்தை பதிவு செய்த பின்னரே விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம். தீர்ப்பு வழங்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இன்று (பிப்ரவரி 12-ந் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

தற்போது அ.தி.மு.க.வில் மூத்த தலைவர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில், சென்னை ஐகோர்ட்டு இன்று வழங்க இருக்கும் தீர்ப்பு, அ.தி.மு.க.வில் புதிய பிரளயத்தை ஏற்படுத்துமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Read Entire Article