ஆட்சியரின் ‘144 தடை’ உத்தரவு, காவல் துறையினரின் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டும் திருப்பரங்குன்றம் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது. பக்தர்கள் வருகை, மக்கள் நடமாட்டம் முன்போல் இல்லாததால் திருப்பரங்குன்றம் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா ஆகியற்றை மையமாக கொண்டு இந்து-முஸ்லீம் அமைப்புகளிடையே கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மோதல் போக்கும், போராட்டங்களும் தொடர்ந்தது. ஆட்சியர் 144 தடை உத்தரவால் கடந்த பிப்.3, 4-ம் தேதிகளில் திருப்பரங்குன்றத்தில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆட்சியர் தடையை மீறியும், போலீஸாரின் மூன்றடுக்கு கண்காணிப்பை கடந்தும் நேற்று இந்து அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்தில் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.