முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 62 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

2 months ago 9

நெல்லை,டிச.3: நெல்ைல, தென்காசி மாவட்டங்களில் சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் 62 வணிக நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதோடு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நெல்லை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எனது தலைமையில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எடையளவுகள் தயாரிப்பாளர், விற்பனையாளர்கள், பழுதுபார்க்கும் நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பஸ் நிலைய கடைகள், தாபாக்கள், மோட்டல்கள் மற்றும் திரையரங்குகள், மால்கள், தண்ணீர்பாட்டில்கள் மற்றும் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருட்கள் உள்ளிட்டவைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொட்டலப்பொருட்களில் தயாரிப்பாளர்களின் பெயர் மற்றும் முகவரி, தயாரிப்பு மாதம், வருடம், காலாவதி தேதி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை முதலான அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்த 7 நிறுவனங்கள், பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர் பதிவுச்சான்று பெறாத 3 நிறுவனங்கள் உள்பட 62 நிறுவனங்களில் பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வணிக நிறுவனங்கள் எடையளவு பொருட்கள் மற்றும் எடையளவு கருவிகளை உரிய கால இடைவெளியில் உரிய வழியில் மறுபரிசீலனை செய்து சான்று பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் மறுபரிசீலனை செய்து சான்று பெறாத வணிக நிறுவனத்தின் மீது ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 62 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article