முன்விரோத தகராறில் வாலிபரை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் சிறை: வேலூர் கோர்ட் தீர்ப்பு

6 hours ago 2

வேலூர், பிப்.28: முன்விரோத தகராறில் வாலிபரை அடித்துக்கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. வேலூர் முள்ளிப்பாளையம் கே.கே.நகரை சேர்ந்தவர் சரண்ராஜ்(21), கூலித்தொழிலாளி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சிவகுமார்(38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி சரண்ராஜ் கே.கே.நகர் முள்ளிப்பாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது, அங்கு நின்றிருந்த சிவகுமார், கொணவட்டம் காமராஜர் தெருவை சேர்ந்த குண்டு என்கிற வில்சன்பால்ராஜ்(39) ஆகியோரை பார்த்த சரண்ராஜ் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.

இதனால் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது வில்சன்பால்ராஜ், சரண்ராஜை சரமாரி தாக்கினாராம். இதில், மயங்கி விழுந்த சரண்ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சரண்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து வில்சன் பால்ராஜ், சிவகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது வில்சன்பால்ராஜ்க்கு ஆயுள் தண்டனையும், ₹5 ஆயிரம் அபராமும் விதித்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார். ேமலும், சிவகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் சிவப்பிரகாசம் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து, வில்சன் பால்ராஜை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

The post முன்விரோத தகராறில் வாலிபரை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் சிறை: வேலூர் கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article