முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சம் வழங்கிய சான்றிதழை ஐஜி நேரில் வழங்கி வாழ்த்தினார். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் 2024ம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், வருடாந்திர தரவரிசையில் சிறந்த காவல் நிலையமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தை ஒன்றிய அரசு தேர்வு செய்து அங்கீகரித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோசி நிர்மல் குமார், அதற்கான சான்றிதழை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாருர் எஸ்பி கருண்கரட், முத்துப்பேட்டை டிஎஸ்பி ஆனந்த், திருவாரூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் துணைக்காவல் கண்காணிப்பாளர் பிலிப் பிராங்க்ளின் கென்னடி மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோசி நிர்மல்குமார் கூறுகையில், ‘இன்றியமையாத காவல்துறை பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் முறையாக கையாண்டு சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறையின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், சேவைக்கான அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள்’ என்றார்.
The post முத்துப்பேட்டை காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு: உள்துறை அமைச்சகம் சான்றிதழ் appeared first on Dinakaran.