சென்னை: “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணைக்கு சென்றபோது, அவர்களுடன் மாநில மகளிர் ஆணையம் ஏன் செல்லவில்லை? ‘யார் அந்த சார்’ என்பதற்கும் தற்போதுவரை பதில் இல்லை. கடுமையான தண்டனைகள் கொடுக்காதவரை நமது சமுதாயத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் நடந்து கொண்டுதான் இருக்கும்,” என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்குப் பிறகாவது இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெறாது என தமிழக அரசால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தோல்வியால் நடந்த சம்பவம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த மாணவிக்கு ஆதரவாக, கட்சி சார்பாக யாரும் எதையும் பேசக்கூடாது. தற்போது கூட பாஜக சார்பில் நாங்கள் இதை பேசவில்லை. பெண் என்ற முறையில் தான் பேசுகிறோம். மாணவிக்கு நடந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம்.