சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தரப்பில், இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார். பிரதான வழக்கின் விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு: அமலாக்கத்துறை பதில் தர அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.