நாமக்கல், ஜூலை 6: தமிழ்நாடு விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அடுத்த முசிறி கிராமத்தில், நாமக்கல் மாவட்ட கனரக வாகனங்கள் பாடி கட்டுமான தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிளஸ்டர்) தொடங்கு வதற்காக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர், அங்கு லாரி பில்டிங் தொழில்பேட்டை அமைக்க, அடிaப்படை வசதிகள் செய்து தருவதற்காக, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, தார்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இதற்காக அரசின் சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதன் பின்னர், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதுவரை அங்கு எந்த தொழில் நிறுவனங்களும் வரவில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், தமிழக தொழில்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, நாமக்கல்லில் லாரி தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என மனு அளித்தார். முசிறி ஊராட்சியில் உள்ள இடம் எந்தவிதமான பயன்பாடும் இல்லாமல் காலியாக உள்ளதால், அந்த இடத்தில் உடனடியாக கலெக்டர் ஆய்வு செய்து, அங்கு லாரி தொழில் பூங்கா அமைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தொழிற்பேட்டை துவங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தொழிற்பேட்டை appeared first on Dinakaran.