சென்னை: மதுராந்தகத்தில் நேற்று நடந்த வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தொழில் வணிக உரிமக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் ஓராண்டு உரிமக் கட்டணத்திலேயே 3 ஆண்டுகளுக்கும் புதுப்பித்திட வேண்டும். உள்ளாட்சி, நகராட்சி, அறநிலையத்துறை கடைகளுக்கான அதீத வாடகை உயர்வை மறு பரிசீலனை செய்து முறைப்படுத்த வேண்டும். 2 டன்களுக்கு குறைவான விவசாய உணவுப்பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு அளித்திட சட்ட நடைமுறை வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வெளியிலோ, வெளி மாநிலங்களிலிருந்தோ கொள்முதல் செய்யப்படும் விவசாய விளைபொருட்களுக்கான 1 சதவிகித செஸ் வரி முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகள் மற்றும் நகர்ப்புற எல்லையிலிருந்து 60 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றிட மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
ஆண்டுதோறும் உயர்த்தப்படும் சுங்கக்கட்டணத்தை உடனடியாக நிறுத்திடவும், தமிழக எல்லைக்குள் மேலும் சுங்கச்சாவடிகள் அமைப்பதை தடுத்து நிறுத்திடவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடித்தட்டு மக்கள் கோடை காலத்தில் செல்லும் மலை சார்ந்த குளிர் மாவட்டங்களான குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உயர் நீதிமன்ற உத்தரவான இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு முற்றிலுமாக தவிர்த்து, நீலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் காத்திட வேண்டும். பிளாஸ்டிக்குக்கு மாற்றுப்பொருட்களை பயன்பாட்டிற்கு அனுமதித்த பின்னரே பிளாஸ்டிக் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வணிகர்நல வாரிய உறுப்பினர்களுக்கான இழப்பீட்டுத்தொகை 3 லட்சத்திலிருது 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். அரசு சார்பில் மே 5ம் நாளை வணிகர் தினமாக அறிவித்து, வணிகர்களை பெருமைப்படுத்த வேண்டும்.
பூந்தமல்லி நகராட்சி 40 சுற்றுப்புற கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதி என்பதாலும், பாரம்பரியம் மிக்க நகராட்சி என்பதனாலும் பூந்தமல்லியை தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்.
தாம்பரம் துரைசாமி ரெட்டியார் மார்க்கெட் வணிகர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவேண்டுதல்
சிறப்பான தொழில், வணிகம் செய்து வேலைவாய்ப்பு வழங்கும் தொழில், வணிகர்களை தேர்வு செய்து, பிற துறைகளில் அரசு விருது வழங்குவதைப்போல, தொழில் வணிகர்களுக்கும் ஆண்டுதோறும், அரசு சார்பில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். அகில இந்திய நிலத்தரகர்கள் சார்ந்த தமிழக நிலத்தரகர்களை அங்கீகரித்து, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் இணைத்துக்கொள்ள தமிழக அரசு முனைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டது.
The post மதுராந்தகத்தில் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு கடைகளுக்கான வாடகையை மறு பரிசீலனை வேண்டும்: 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.