அருமனை, பிப்.7: அருமனை அருகே சிதறால் வெள்ளங்கோடு பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சுனில் (34). பூவன்விளையை சேர்ந்தவர் அகஸ்டின் (35). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியாகவும் அகஸ்டின் சுற்றிவந்துள்ளார். சம்பவத்தன்று அருமனையில் உள்ள தனியார் பாரில் சுனில் மற்றும் அகஸ்டின் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயம் பாரில் இருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். எனினும் ஆத்திரத்தில் இருந்த அகஸ்டின் அன்று இரவு அரிவாளுடன் சுனில் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் சுனில் இல்லை. அவருடைய தாயார் மட்டும் இருந்துள்ளார். இதனால் வீட்டின் ஜன்னலை அடித்து உடைத்த அகஸ்டின் தாயாரை மிரட்டிவிட்டு சென்றார். இதனை அறிந்த சுனில், அகஸ்டின் வீட்டுக்கு சென்று ஜன்னலை உடைத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து சுனிலின் தாய் அருமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பெண்ணை அரிவாளுடன் வந்து மிரட்டிய ரவுடியான அகஸ்டினை கைது செய்தனர். மேலும் வீட்டை தாக்கிவிட்டு தலைமறைவான சுனிலை தேடி வருகின்றனர்.
The post மது குடித்தபோது தகராறு வாலிபர் வீட்டை சேதப்படுத்திய ரவுடி கைது appeared first on Dinakaran.