
கோவையை சேர்ந்தவர் பிரபல மதபோதகர் ஜான் ஜெபராஜ். இவர், கோவையில் 'கிங் ஜெனரேஷன்' கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தை நிறுவி மதபோதகராக உள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு மே 21-ந்தேதி தன் வீட்டில் நடந்த விருந்தின்போது, 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜான் ஜெபராஜ் மீது காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த மாதம் கேரளாவில் தலைமறைவாகி இருந்த ஜான் ஜெபராஜை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், அவர் மனு தாக்கல் செய்தார். அதில், "என் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறேன். என் மனைவியின் குடும்பத்தினர் தூண்டுதலின்பேரில் இந்த பொய் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன். அதனால், ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.