
புதுடெல்லி,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் மோதலைத்தொடர்ந்து அவரது பாதுகாப்பு குறித்து உயர்மட்டக்குழு ஆலோசித்தது.
அதன் அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு கூடுதலாக 2 குண்டு துளைக்காத கார்கள் வழங்கப்பட்டன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் அவரைப் பாதுகாக்க 33 கமாண்டோக்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பல்வேறு உலகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் பேசி வருகிறார். இத்தகையச் சூழலில்தான், ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகரிப்பு தொடர்பான செய்தி வந்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, வி.ஐ.பி.களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.