லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது. மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று புனித நீராடினார். இதனைத் தொடர்ந்து கங்கை நதிக்கு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்ட ராஜ்நாத் சிங், தீப ஆராதனை காட்டி வழிபட்டார்.
அப்போது பா.ஜ.க. எம்.பி. சுதான்ஷு திரிவேதி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதை தன்னுடைய அதிர்ஷ்டமாக கருதுவதாகவும், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிறகு மனநிறைவாக உணர்வதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.