மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

2 hours ago 1

கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று தொடங்கியது.

இதனையொட்டி இன்று அதிகாலை கோ பூஜை செய்யப்பட்டு கோவில் நடைதிறக்கப்பட்டது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முன் மண்டபத்தில் தைப்பூச திருவிழா கொடியேற்றுவதற்கான சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகள் முடிந்ததும் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் சேவல் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தைப்பூச தேரோட்டத்திற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.

கொடியேற்றத்தையொட்டி விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

மதியம் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி அன்னவாகனத்தில் வீதிஉலாவும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு வேள்வி பூஜை நடக்கிறது.

10-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்ததும் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கண்ணாடி மஞ்சத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேர்த்திருவிழா 11-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பாதயாத்திரை வரும் பக்தர்கள் விடிய, விடிய சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

Read Entire Article