
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது. இந்த கும்பமேளாவில், இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்த கும்பமேளாவில், பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் கும்பமேளாவில் புனித நீராட ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரயாக்ராஜ் நகருக்கு இன்று வருகை தந்தார். பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதியை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர். காலை 11 மணியளவில் திரிவேணி சங்கமத்திற்கு வந்த ஜனதிபதி அங்கு புனித நீராடினார். இதனை தொடர்ந்து அவர் அக்ஷயவத் மற்றும் படே ஹனுமான் கோயிலிலும் பிரார்த்தனை செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.