கூடுவாஞ்சேரி: ஓட்டேரியில் 18ம் ஆண்டு மகளிர் தின விழாவை முன்னிட்டு, 72 பெண்களுக்கு தலா அரை சவரன் தங்க கம்மலை முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் ஊராட்சியில் வேம்புலி அம்மன் மகளிர் குழு, கங்கை அம்மன் மகளிர் சுய உதவி குழு, இரணியம்மன் மகளிர் சுய உதவி குழு, துர்க்கை
அம்மன் மகளிர் சுய உதவி குழு ஆகியவை உள்ளன.
இந்த குழுக்களில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் மகளிர் தின விழா கொண்டாடும்போது அரை சவரன் தங்க நகை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 18ம் ஆண்டு மகளிர் தின விழா ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரியில் உள்ள வேம்புலி அம்மன் கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மகளிர் சுய உதவி குழு தலைவி வசந்தாதேவேந்திரன் தலைமை தாங்கினார். மற்ற குழுக்களின் தலைவிகள் புவனேஸ்வரிஜெயச்சந்திரன், மனோன்மணி கமலக்கண்ணன், நந்தினிகுணசேகரன், செயலாளர்கள் மகாலட்சுமி வேதாசலம், சுகன்யா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு முன்னாள் துணை பெரும் தலைவர் தேவேந்திரன், முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஓட்டேரி குணசேகரன், 9வது வார்டு உறுப்பினர் ஜெகன்தேவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 18ம் ஆண்டு மகளிர் தின விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.
பின்னர், 72 பெண்களுக்கு தலா அரை சவரன் தங்க கம்மல் மற்றும் புடவை ஆகியவற்றை வழங்கினர். இதனையடுத்து மகளிர் சுய உதவி குழுவினர், தூய்மை பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கினர். இதில், கிராம நல சங்க செயலாளர்கள் ரமேஷ், கமலகண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post மகளிர் தின விழாவில் 72 பெண்களுக்கு தலா அரை சவரன் கம்மல்: முன்னாள் திமுக ஊராட்சி தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.