
மாஸ்கோ,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, ரஷியா, 30 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை அறிவித்து இருந்தது. இதன்படி, தாக்குதலுக்கு தற்காலிக தடை விதித்து இருந்தது.
இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இரவில் 48 ஆளில்லா விமானங்களை கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது என ரஷிய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இதுபற்றி வெளியான எக்ஸ் பதிவில், ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடும்போது, கிரீமியா பகுதி உள்பட ரஷிய நிலைகளை இலக்காக கொண்டு துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் 444 முறை உக்ரைன் படைகள் தாக்கின என தெரிவித்து உள்ளது.
ரஷிய கூட்டமைப்பின் ஆயுத படைகளின் தலைமை தளபதியின் உத்தரவின்படி, சிறப்பு ராணுவ செயல் மண்டலத்தில் குவிக்கப்பட்டு உள்ள அனைத்து படை குழுவினரும், ஏப்ரல் 19-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தினை கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த சூழலில், எல்லை பகுதிகளான பிரையான்ஸ்க், குர்ஸ்க் மற்றும் பெல்கராட் உள்ளிட்ட மண்டலங்களில் எதிரி படையினர் தாக்குதல்களை நடத்தினர். இதில், பொதுமக்களில் பலர் பலியானார்கள். காயமும் அடைந்துள்ளனர் என ரஷிய தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், எத்தனை பேர் பாதிப்புக்கு ஆளானார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
ஈஸ்டரை முன்னிட்டு 30 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே, ரஷிய படையினர் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளனர் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு தெரிவித்து இருந்த நிலையில், ரஷியா இதனை தெரிவித்து உள்ளது.
2022-ம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்டு உள்ள போர்நிறுத்த ஒப்பந்த முயற்சி இதுவாகும். 2023-ம் ஆண்டு ஜனவரியில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அது தோல்வியில் முடிந்தது.