கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டபடி மே 13ல் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 8-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்செயல் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில், பொள்ளாச்சி டவுன் போலீசார் முதலில் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில், கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், இவ்வழக்கின் நீதிபதி ஆர்.நந்தினிதேவி, விசாரணை முடிந்ததால் வரும் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும், அன்று குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என அறிவித்தார்.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் நேற்று அறிவித்தார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை நீதிமன்றம் அறிவித்த நிலையில், அந்த நீதிமன்றத்தின் நீதிபதி நந்தினி தேவி கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். நீதிபதி மாற்றத்தால் இந்த வழக்கில் அறிவித்தபடி தீர்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து, அரசாணை பிறப்பித்த பிறகே பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி அந்த பொறுப்பை ஏற்க முடியும் என்பதாலும் பணியிட மாற்ற நடைமுறைக்கு சிறிது காலமாகும் என்பதாலும் அறிவித்தப்படி தீர்ப்பளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
The post பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டபடி மே 13ல் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல்!! appeared first on Dinakaran.