சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் திருவிழாவின்போது ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் கலை நிகழ்ச்சிகள் நாளை (13ம் தேதி) கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளன. தொடக்க விழாவை அடுத்து, ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், தி.நகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு திடல் ஆகிய 18 இடங்களில் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில்’ 1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைகளை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்த உள்ளனர்.
The post பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.