சென்னை: புதிய நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தியால் தேமுதிகவில் இருந்து 2 முன்னாள் எம்எல்ஏக்கள் விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக பொதுக்குழு கூட்டம் கடந்த 30ம் தேதி தர்மபுரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேமுதிகவின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். மீண்டும் பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக எல்.கே.சுதீஷ், செயலாளராக பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளராக விஜய காந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் நியமனத்தால் 2 தேமுதிக முன்னாள் எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
அதில் ஒருவர் தேமுதிக செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக இருந்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன். விஜயகாந்த் தேமுதிக தலைவராக இருந்தபோது பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். இந்நிலையில் மாவட்ட செயலாளராக இருந்து வரும் அவருக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது. இந்த முறை அவர் மீண்டும் அதுபோன்ற மாநில அளவில் ஒரு பதவி கிடைக்கும் என்று அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தார்.
அதுபோன்ற எந்த பதவியும் வழங்காததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அனகை முருகேசன் தேமுதிகவில் இருந்து விலகி விட்டதாகவும் தகவல் வெளியானது. இதுபற்றி அனகை முருகேசன் கூறுகையில், ‘‘மாநில அளவில் பொறுப்புகளில் இருப்பவர்கள் என்னைவிட இளையவர்கள் தான். மாநில அளவில் பொறுப்பு கிடைக்காததில் எனக்கு சிறிய மனம் வருத்தம் உள்ளது. இதற்கெல்லாம் கட்சி வேண்டாம் என்று வெளியில் செல்வதற்கு நான் தயாராக இல்லை’’ என்றார்.
இதேபோல, சென்னை எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான நல்லதம்பியும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். தன்னிடம் இருந்த இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நல்லதம்பிக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அந்த பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு நல்லதம்பி கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அந்த கடிதத்தில், ‘‘விஜயபிரபாகரனை தேமுதிக இளைஞரணி செயலாளராக அறிவித்தமைக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் காவல் தெய்வம் அண்ணியின் (பிரேமலதா) கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை, என்றைக்கும் நான் தேமுதிகவின் கடைக்கோடி தொண்டன். எனக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி விடுவிக்காதபட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன். இதனை மன மகிழ்ச்சியோடுதெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். நல்லதம்பியின் கடிதம் வெளியானது பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு விஷயமாக மாறியது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் எக்ஸ் தள பக்கத்தில் நல்லதம்பி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், கட்சியிலிருந்து நான் விலகப் போவதில்லை என்றும், பொறுப்பில் இருந்து மட்டுமே விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் கடைசி மூச்சு இருக்கும் வரை, தான் கட்சி தொண்டனாக பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவில் 2 முன்னாள் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பது தேமுதிகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருவரும் தேமுதிகவில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தேமுதிகவில் இருந்து ஏற்கனவே பலர் விலகி பல்வேறு கட்சியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post புதிய நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தியால் போர்க்கொடி முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் தேமுதிகவில் இருந்து விலகல்? பொது செயலாளர் பிரேமலதாவுக்கு பரபரப்பு கடிதம் appeared first on Dinakaran.