கரூர்: கரூர் மாவட்டம் வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் செந்தூர் பாண்டியன் (48). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, வாங்கல் காவல் நிலையத்துக்கு சொந்த பிரச்னை காரணமாக இளம்பெண் புகார் கொடுக்க வந்தார். அப்போது அவரிடம் செல்போன் நம்பரை இன்ஸ்பெக்டர் பெற்று கொண்டார். பின்னர் வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண்ணின் வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர், புகார் கொடுத்தீர்களா? இது சம்பந்தமாக யார் உங்களிடம் பேசியிருந்தால் அந்த எண்ணை எனக்கு வாட்ஸ்அப்பில் போட்டு விடுங்கள். வேறு என்ன சாப்பாட்டாச்சா?’ என கேட்டுள்ளார். தொடர்ந்து, ‘வாட்ஸ் அப் டிபியில் உள்ள போட்டோ சரியாகவே தெரியமாட்டேங்குது. டிபியில் உள்ளதை நன்றாக தெரியும் வகையில் வைக்க வேண்டியதுதானே’ என இன்ஸ்பெக்டர் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், ‘தெரிய வேணாம் என்று தான் அவ்வாறு வைத்துள்ளேன்’ என பதில் கூறி உள்ளார்.
உடனே இன்ஸ்பெக்டர், ‘அப்படி வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, எனக்கு போட்டோ மட்டும் செண்டு பண்ணுங்க ப்ளீஸ், ப்ளீஸ்மா மறந்து விடாமல் செண்டு பண்ணுங்க’ என பேசி உள்ளார். வாட்ஸ் அப் காலில் ரெக்கார்டு செய்ய முடியாது என நினைத்து அந்த பெண்ணை இன்ஸ்பெக்டர் வாட்ஸ் அப் காலில் அழைத்து உள்ளார். ஆனால், அந்த பெண் இன்ஸ்பெக்டர் பேசும் வாட்ஸ் காலை மற்றொரு செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட திருச்சி சரக டிஐஜி வருண்குமார், இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
The post புகார் அளிக்க வந்த பெண்ணிடம் போட்டோ கேட்டு கெஞ்சிய இன்ஸ்.: செல்போனில் கடலை போட்டதால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.