![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/38998195-untitled-01.webp)
சென்னை,
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி ஒருவருக்கு 3 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை கடந்த 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 121-ல் தெரிவிக்கப்பட்டதுதான். அந்த அரசாணையின்படி, இதுபோல் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற கடும் தண்டனைகள் விதிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்த அரசாணை முழுமையான செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.
தற்போது அதிகரிக்கும் பாலியல் தொல்லை சம்பவம் எதிரொலியாக இந்த அரசாணையின் கீழ் நடவடிக்கை எடுக்கும் பணிகளில் கல்வித்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்கேற்றாற்போல், கடந்த 10 ஆண்டுகளில் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை கல்வித்துறை சேகரித்துள்ளது. அதன்படி, தொடக்கக் கல்வித்துறையில் 80 பேரும், பள்ளிக்கல்வித்துறையில் 175 பேரும் என 255 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. அவர்கள் மீது பணி நீக்கம், கல்வித்தகுதி ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை கல்வித்துறை முடுக்கி விட்டுள்ளது.