சங்கரன்கோவில், ஜன.11: ராஜபாளையம் பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வந்த டிரைவர், கார் மோதி பரிதாபமாக பலியானார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் மாரிச்செல்வம் (40). டிரைவர். மாரிச்செல்வம் அப்பகுதியை சேர்ந்த முருக பக்தர்களுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தார். நேற்று காலை பாதயாத்திரை குழு சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகநல்லூர் அருகே வரும்போது பின்னால் வந்த கார், மாரிச்செல்வம் மீது மோதியது.
இதில் மாரிச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரிச்செல்வத்திற்கு வள்ளி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பாதயாத்திரையாக வந்த முருக பக்தர் கார் மோதி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post பாதயாத்திரை பக்தர் கார் மோதி சாவு appeared first on Dinakaran.