பாஜவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர்: சிவகங்கையில் பரபரப்பு

23 hours ago 3

திருப்புவனம்: தேர்தலில் மட்டுமே கூட்டணி; ஆட்சியில் கூட்டணி இல்லை என பாஜவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜவுடன் கூட்டணி இல்லை என மறுத்து வந்தார். இதையடுத்து எடப்பாடி உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இதன்மூலம் எடப்பாடியை தங்களது வழிக்கு கொண்டு வர நினைத்த, டெல்லி பாஜக தலைமை, எடப்பாடியை டெல்லிக்கு அழைத்தது. அமித்ஷா எடப்பாடியுடன் ரகசியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போதே தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். இந்நிலையில், அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பாஜ தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி என தெரிவித்ததாக கூறப்பட்டது. மேலும், சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்கக் கூடாது எனவும் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக தலைவராக அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி என்பது போல சில பாஜ தலைவர்கள் பேசி வந்தனர். இதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி, தம்பித்துரை ஆகியோர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை. அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்றார். கூட்டணி ஆட்சி’ என்று அமித்ஷா அறிவித்தது தொடர்பாக அதிமுக-பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச்செயலாளர் மணிமாறன் என்பவரது பெயரில் இன்று காலை திருப்புவனம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், `பாஜகவுடன் தேர்தல் கூட்டணி தானே தவிர ஆட்சியில் கூட்டணி கிடையாது. அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பாஜவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர்: சிவகங்கையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article