சென்னை, மே 10: பாகிஸ்தான் பெயரில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இந்த கிரிக்கெட் மைதான அலுவலகத்திற்கு நேற்று மதியம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் ‘இன்னும் சற்று நேரத்தில் மைதானத்தில் வைத்துள்ள ெவடிகுண்டு வெடிக்கும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி, போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் மைதானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். அதில் எந்த வெடிகுண்டும் சிக்க வில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மின்னஞ்சல் பாகிஸ்தானில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இருந்தாலும் மின்னஞ்சல் முகவரியை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் அத்துமீறி டிரோன் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சென்னை கிரிக்கெட் மைதானத்திற்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பாகிஸ்தான் பெயரில் மின்னஞ்சல் மூலம் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு சைபர் க்ரைம் போலீஸ் வலை appeared first on Dinakaran.