பாகிஸ்தானுக்கு நிதியுதவியா..? ஐஎம்எப் அமைப்பிற்கு இந்தியா வைத்த கோரிக்கை

7 hours ago 1

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் கடனை ஐ.எம்.எப். வழங்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இந்த கடன் பாகிஸ்தானின் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு ஆதரவாக வழங்கப்பட உள்ளது. இந்த கடனை வழங்குவது குறித்து ஐஎம்எப் அமைப்பு இன்று மதிப்பாய்வு செய்ய இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன் ஆழமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் கடனை வழங்குவது குறித்து ஐஎம்எப் அமைப்பு இன்று மதிப்பாய்வு செய்ய உள்ள நிலையில், இதனை இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்காக வழங்கப்பட்ட நிதி எதற்காக பெறப்பட்டதோ அதற்காக பயன்படுத்தப்பட்டதா,அல்லது வேறு எதற்காகவும் பயன்படுத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Read Entire Article